திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.72 திருவின்னம்பர் - திருநேரிசை
விண்ணவர் மகுட கோடி
    மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
    பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா
    மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
1
பன்னிய மறையர் போலும்
    பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந்
    தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
    மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
2
மறியொரு கையர் போலும்
    மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
    பணிகொள் வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை
    சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
3
விடமலி கண்டர் போலும்
    வேள்வியை அழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலும்
    காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும்
    பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
4
அளிமலர்க் கொன்றை துன்றும்
    அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்
    காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்
    வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும்
    இன்னம்பர் ஈச னாரே.
5
கணையமர் சிலையர் போலுங்
    கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந்
    தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி
    அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
6
பொருப்பமர் புயத்தர் போலும்
    புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
    மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
    உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
7
காடிடம் உடையர் போலுங்
    கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
    வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை
    கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
8
காறிடு விடத்தை யுண்ட
    கண்டரெண் டோளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
    நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப்
    பலிதிரிந் துண்பர் போலும்
ஏறடைக் கொடியர் போலும்
    இன்னம்பர் ஈச னாரே.
9
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
    அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
    படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
    திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்
    இன்னம்பர் ஈச னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்
மன்னு மலைமகள் கையால்
    வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு
    ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத்
    தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
1
பைதற் பிணக்குழைக் காளிவெங்
    கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்
    செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை
    யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
2
சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
    சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
    மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி
    யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
3
ஆறொன் றியசம யங்களின்
    அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்
    மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு
    விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
4
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
    னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
    நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
    வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
5
கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
    தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு
    மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்
    றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின் இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
6
போற்றுந் தகையன பொல்லா
    முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு
    சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய
    தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
7
பயம்புன்மை சேர்தரு பாவந்
    தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்
    குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென்
    றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
8
அயன்நெடு மால்இந் திரன்சந்தி
    ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும்
    பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
    நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
9
தருக்கிய தக்கன்றன் வேள்வி
    தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்
    இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை
    பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
    ரான்றன் இணையடியே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com